1 நிபந்தனை
1 நிபந்தனை
நான் கௌதம். யங் பிசினஸ் மேன்.
நம்ம நினைக்கிறதை எல்லாம் வாழ்க்கை தந்துடாது. நானும் அதுக்கு விதிவிலக்கு இல்ல. என் லைஃப்ல, நான் பயங்கரமான ஏற்ற இறக்கத்தை எல்லாம் பார்த்திருக்கேன். இது தான் என்னோட லைஃப் ஜர்னி . அதை உங்களோட ஷேர் பண்ணிக்க விரும்புறேன். உங்க சீட் பெல்ட்டை மாட்டிக்கிட்டு, இந்த ரைடுக்கு ரெடி ஆகுங்க. ஏன்னா நான் காரைக் கொஞ்சம் வேகமா ஓட்டுவேன். அதுக்காக நீங்க பயப்பட வேண்டாம், ரொம்ப சேஃபா ஓட்டுவேன்ங்க.
எனக்கு என் குடும்பம் தான் எல்லாமே. என் குடும்பத்தோட ஆனந்தமா இருக்க நான் எதையும் செய்வேன். அழகான பொண்ணுங்க என்னைப் பத்திப் பெருமையா பேசுறதை நான் கேட்டிருக்கேன். பொண்ணுங்க என்னை வெளிப்படையாகவே சைட் அடிப்பாங்க. நான் அதையெல்லாம் கண்டுக்கிட்டதே இல்ல. நான் எப்பவும், எந்த ஒரு நிர்பந்தத்துக்கும் உட்பட்டவனா இருக்க விரும்பினதில்ல. நான் எந்தப் பொண்ணுகிட்டயும் மாட்டாம இருந்ததுக்கு அது காரணமா இருக்கலாம். என்னை நானே ஆள நினைச்சேன். என்னோட உணர்ச்சிகளுக்கு நான் தான் எஜமானனா இருக்கணும். மத்தவங்களோட விருப்பத்துக்குப் போறது எனக்குப் பிடிக்காது. என்னோட லைஃப் நான் விருப்பட்டபடி தான் அமையணும்னு நெனச்சேன். அதனால தான் எனக்காக என்ன வேணா செய்ய பொண்ணுங்க தயாரா இருந்த போதிலும், நான் கமிட் ஆகல. எங்கிட்ட அப்படி ஒரு ஆளுமை இருந்தது.
என் குடும்பத்தைப் பத்திச் சொல்லியே ஆகணும்.
சகுந்தலா இளவேந்தன்... என்னோட அம்மா. அவங்க தான் எனக்கு உலகம். எந்த ஒரு குடும்பத்துக்கும் கிடைக்க வேண்டிய உன்னத பெண்மணி. ஆனா, அவங்க மதிப்பு தெரியாத ஒருத்தர் தான் அவங்களுக்குக் கணவனா கிடைச்சார். எங்க அப்பாவைத் தான் சொல்றேன். நான் யாரையும் காதலிக்காம இருந்ததுக்கு என் அம்மா தான் காரணம். என் மனைவி, எங்க அம்மாவுக்கு ஒரு நல்ல ஃபிரண்டா இருக்கணும்னு நான் ஆசைப்பட்டேன். அவ என் அம்மாவோட வலி நிவாரணியா இருக்கணும். என் அம்மா கவலையா இருக்கும்போது, அவளைப் பார்க்க ஆசைப்படணும். ஆனா என் வாழ்க்கையில அப்படிப்பட்ட ஒரு பொண்ண நான் மீட் பண்ணவே இல்ல. என்னை விரும்பின எல்லா பொண்ணுங்களோட கவனமும் என் மேல மட்டும் தான் இருந்துது. அதனால ஒரு எலிஜிபில் பேச்சுலரா இருந்தாலும், நான் இன்னும் சிங்கிளாவே இருக்கேன்.
என் அப்பா இளவேந்தன்... அவருக்கு கௌரவமும் வியாபாரமும் ரெண்டு கண்ணு மாதிரி. தன்னோட வியாபாரத்தை வளர்க்கவும், கௌரவத்தைக் காப்பாத்திக்கவும் அவர் என்ன வேணா செய்வார். நான் அவரோட பிசினஸை எடுத்து செய்யணும்னு அவர் ஆசைப்பட்டார். நானும் அதைச் செய்யத் தயாரா தான் இருந்தேன். எங்க அப்பாவுக்குப் பிள்ளையா இருக்கிறதால அதை நான் செஞ்சி தானே ஆகணும்! அதுக்காக, நான் மட்டுமே அவங்களுக்கு வாரிசுன்னு நினைச்சுக்காதீங்க. எனக்கு மாதங்கி, நந்தினின்னு ரெண்டு சிஸ்டர்ஸ் இருக்காங்க.
அக்காவோட ஹஸ்பண்ட் மனோகர் ஒரு லாயர். தன்னோட கௌரவத்தைப் பத்திக் கவலைப்படாம எங்க அப்பா செஞ்ச ஒரே காரியம், எங்க அக்காவை மனோகருக்குக் கல்யாணம் பண்ணி வச்சது தான். மனோகர் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவர். ஆனாலும் எங்க அப்பா அவங்க கல்யாணத்துக்குச் சம்மதித்தார். எங்க அக்கா மேல இருந்த அக்கறையினால இல்லங்க. அக்கா கல்யாணம் பண்ணிக்கிட்டு, எங்க வீட்டை விட்டு போயிட்டா, எங்க அப்பாவுக்கு பிசினஸ்ல ரொம்ப பெரிய நஷ்டம் ஏற்படும்னு எங்க குடும்ப ஜோசியர் சொல்லிட்டாரு. பெரிய இடத்து பிள்ளைங்க யாரும் வீட்டோட மாப்பிள்ளையா வரமாட்டாங்களே... அதனால, எங்க அக்காவுக்குக் கல்யாணமே செஞ்சி வைக்க வேண்டாம்னு முடிவு பண்ணிட்டாரு. அக்கா மனோகரைக் காதலிக்கிற விஷயம் தெரிஞ்சு, கல்யாணத்துக்குப் பிறகு, எங்க வீட்டை விட்டுப் போகாம, அவர் கூடவே இருக்கணும்னு சத்தியம் வாங்கிகிட்டு தான் அவங்களுக்குக் கல்யாணம் பண்ணி வச்சாரு. அக்கா மேல இருந்த காதலால, மனோகரும் அதுக்கு ஒத்துக்குட்டார். இப்போ மனோகர், அக்கா, அக்காவோட டாடர்ஸ் மித்ரா, நித்ராவோட எங்க வீட்ல தான் இருக்கார். அக்கா பொண்ணுங்க ரெண்டு பேரும் படுசுட்டி. ஆனாலும் பெரியவங்க பேச்சைக் கேட்கிற சமத்து பிள்ளைங்க.
கடைசியா, ஆனா, ரொம்ப முக்கியமான ஒரு ஆள், என் செல்ல தங்கை நந்தினி. எங்களுக்கு ஆறு வயசு வித்தியாசம். ஆனா எங்க ரெண்டு பேருக்கும் இருந்த பந்தம் அசாதாரணமானது. எந்த முக்கியமான விஷயமா இருந்தாலும், அவ என்கிட்ட தான் ஷேர் பண்ணுவா. அண்ணன் தங்கை உறவுக்கு மேல, எங்களுக்குள்ள ஒரு நல்ல நட்பு இருந்தது. மத்தவங்களை விட என்னை ரொம்ப நல்லா புரிஞ்சிகிட்டவ அவ தான். அவளோட ஆனந்தம் எனக்கு ரொம்ப முக்கியம். அவளுக்காக நான் எதையும் செய்வேன்.
அவளோட விருப்பத்தை நிறைவேத்தி தீர வேண்டிய ஒரு இக்கட்டான நிலையில நான் இருந்தேன். அவ அரச குடும்பத்தை சேர்ந்த ரவீந்திர சேதுபதியோட மகன், சூரியகுமார சேதுபதியைக் காதலிச்சா. அவங்க குடும்பம் இந்தியாவில் மட்டுமில்ல, வெளிநாட்டிலயும் நிறைய பிசினஸ் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. எங்களை விட 100 மடங்கு பணக்காரங்க. ஆனாலும் எங்க கூட சேர்ந்து பிசினஸ் பண்ணத் தயாரா இருந்தாங்க... ஒரு நிபந்தனையோட...
நந்தினி, சூரியகுமார் கல்யாணம் நடக்கணும்னா, நான் சூரியகுமாரோட தங்கச்சி ஹாசினியைக் கல்யாணம் பண்ணிக்கணுமாம். சந்தேகமில்லாம, இது ஒரு கிவ் அண்ட் டேக் பாலிசி தான். அவங்க, ஏன் நான் அவங்க மகளைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு விரும்பினாங்கன்னு எனக்குப் புரியவே இல்ல. அவங்க அரசு குடும்பத்தைச் சேர்ந்தவங்க. இந்தியாவோட ரொம்ப பெரிய பணக்கார மாப்பிள்ளைங்க அவளைக் கல்யாணம் பண்ணிக்க ரெடியா இருப்பாங்க. அப்படி இருக்கும்போது, நான் அவங்க வீட்டு மாப்பிள்ளையா வரணும்னு அவங்க ஏன் நினைச்சாங்கன்னு தான் எனக்குப் புரியல.
இந்தக் கல்யாணம் எனக்குச் சுத்தமா பிடிக்கல. நான் ஆசைப்பட்டது இது இல்ல. நான் குடும்ப பாங்கான ஒரு பொண்ணு தான் எனக்கு மனைவியா வரணும்னு ஆசைப்பட்டேன். ஹாசினி நிச்சயம் அதுக்கு ஏத்தவளா இருக்க மாட்டா. ஏன்னா, அவ ராயல் ஃபேமிலியோட வாரிசு. என் அம்மாவோட போராட்டத்தை எல்லாம் அவளால ஒரு நாளும் புரிஞ்சுக்க முடியாது. என் அம்மாகிட்ட அவ சிரிச்சு பேசுவாளான்னு கூட எனக்குச் சந்தேகம் தான்.
அப்படி இருக்கும்போது, இந்தக் கல்யாணத்தை நான் எப்படி ஏத்துக்குறது? என்னைப் பொறுத்த வரைக்கும், இது ஒரு பேரிடர். என் கனவு, என் ஆசை, எல்லாத்தையும் முடிச்சு விடப் போகுது. நான் ஹாசினிக்கு அடிமையா இருக்கணும்.
எனக்கு இது பிடிச்சிருக்கா இல்லயான்னு எங்க அப்பா என்னைக் கேக்கல. என் விருப்பத்தைத் தெரிஞ்சுக்க அவர் தயாரா இல்ல. திடீர்னு ஏற்பட்ட வீழ்ச்சியிலயிருந்து எங்க பிசினஸை காப்பாத்தி, ஒரு நிலைத்தன்மையைக் கொண்டு வர அவர் விரும்பினார். எங்க கம்பெனி, ஷேர் மார்க்கெட்ல ரொம்ப மோசமான சரிவைச் சந்திச்சிது. அது திடீர்னு எப்படி நடந்ததுன்னு எங்களுக்குப் புரியவே இல்ல. எங்க அப்பா நிலை குலைஞ்சி போனார். தன்னோட நம்பிக்கையை மொத்தமா இழந்தார். எங்க கம்பெனியை மீட்டெடுக்க அவர் எதையும் செய்யத் தயாரா இருந்தார்.
அப்போ தான், ராயல் ஃபேமிலி எங்க வீட்டு வாசல் கதவைத் தட்டுச்சு. அவங்க மகன் சூரியகுமாரும் என் தங்கை நந்தினியும், ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கிறாங்கன்னு நாங்க தெரிஞ்சுகிட்டோம். அரச குடும்பத்தோட வரனை ஏத்துக்கிற அளவுக்கு எங்ககிட்ட வசதி இல்லாததால, எங்க அப்பா என்ன செய்யறதுன்னு புரியாம தவிச்சார். எங்க பிசினஸை நஷ்டத்துல இருந்து மீட்டெடுக்க, எங்க கையில இருந்த மொத்த சேவிங்சையும் நாங்க ஏற்கனவே செலவு பண்ணிட்டோம். அவங்க தகுதிக்குத் தகுந்த மாதிரி எங்களால அந்தக் கல்யாணத்தை நடத்த முடியும்னு எங்களுக்குத் தோணல. ஆனா எங்களுக்குச் சர்ப்ரைஸ் கொடுக்கிற மாதிரி, அவங்க என்கிட்ட எதையுமே கேட்கல.
அதுமட்டுமில்லாம, எங்க கூட சேர்ந்து புது பிசினஸ் ஆரம்பிக்கவும் அவங்க தயாரா இருந்தாங்க. அது நாங்க கொஞ்சம் கூட எதிர்பாக்காத ஒன்னு. நடுக்கடல்ல தத்தளிச்சிக்கிட்டு இருந்த எங்களுக்கு, அவங்க கை கொடுத்து உதவும் போது, கடவுள் மாதிரி தெரிஞ்சாக. எங்க சந்தோஷத்துக்கு அளவே இல்ல. ஆனா, அந்த சந்தோஷம் ரொம்ப நேரம் நீடிக்கல... அதாவது என்னோட சந்தோஷம்! அவங்க கண்டிஷனைக் கேட்டு, அது பறந்து போயிடுச்சு.
அவங்க எங்களுக்குக் கொடுக்கத் தயாரா இருந்த அத்தனை லாபத்தையும், நாங்க அடையணும்னா, நான் ஹாசினியைக் கல்யாணம் பண்ணிக்கணும்.
எங்க கூட பிசினஸ் பார்ட்னரா மாறத் தயாரா இருந்த அப்படி ஒரு க்ரேட்டான அலையன்சை விட, எங்க அப்பா தயாரா இல்ல. கலப்படமில்லாத சுத்தமான பிசினஸ் மேனான அவரு, அந்தச் சான்சை அடைய, அவரோட மகனைத் தியாகம் பண்ண முடிவெடுத்தார். என் விருப்பத்தைப் பத்தி ஒரு வார்த்தையும் கேட்காம அவங்களுக்குச் சம்மதம் சொன்னார்.
என்னை நிர்பந்திக்கிற எந்த ஒரு விஷயத்தையும் செய்ய நான் எப்பவும் விரும்பினதே இல்ல. ஆனா இப்போ, அரச குடும்பத்தோட கண்டிஷனை ஏத்துக்கிற நிர்பந்தத்துக்கு நான் ஆளானேன். நான் அதை ஏத்துக்கத் தயாரா இருந்தேனா, இல்லயான்னு எங்க அப்பா கவலைப்படல. என்னோட கல்யாணம் ஹாசினியோட நிச்சயமாச்சு.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen3h.Co